கடையநல்லூர் அரசு ஐடிஐ யில் இருசக்கர வாகன பராமரிப்பு பயிற்சி - ஆட்சியர் தகவல்
வேலைவாய்பை தேடும் இளைஞர்கள் மற்றும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை முன்னேற்றும் விதமாக இருசக்கரவாகனம் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சியை கடையநல்லூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்இலவசமாக வழங்குகிறது.
HIGHLIGHTS
கடையநல்லூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அம்மா இருசக்கரவாகனம் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு குறித்த குறுகியகால பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கடையநல்லூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கும் இந்நிலையத்தில் அம்மா இருசக்கரவாகனம் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு குறித்த இலவச குறுகியகால பயிற்சி விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.
பயிற்சிக்காலம் 300 மணி நேரம் (இரண்டுமாதங்கள்). இப்பயிற்சியில் சேரவிரும்பும் 5 ம் வகுப்பு தேர்ச்சி அதற்கு மேலும் கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதுக்குள் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் அலுவலக வேலை நாட்களில் நேரில் நிலையத்திற்கு வந்து விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு போக்குவரத்து செலவு உதவித்தொகை ரூ100 வீதம் 85 சதவீதம் வருகைபுரிந்த பயிற்சியாளர்களுக்கு பயிற்சியின் முடிவில் வழங்கப்படும். இந்த திறன் எய்தும் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேரவிரும்பும் கடையநல்லூர் சுற்று வட்டார பகுதியில் இருக்கும் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடையநல்லூர் என்ற முகவரியில் நேரில் வந்து 04.01.2021 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.