ஆணையர் மனு ரசீது வழங்க வலியுறுத்திய பாமக
திருவண்ணாமலையில் கோரிக்கை மனுவிற்கு ஆணையர் ரசீது வழங்க வேண்டுமென பாமக வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பு முன்னாள் தர்மபுரி எம்எல்ஏ வேலுச்சாமி தலைமையில் தமிழக அரசு வன்னியர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு உடனே வழங்க கோரி பெண்கள் உள்பட ஏராளமான பாமகவினர் கோட்டை மைதானத்தில் இருந்து ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாநில துணைபொதுச்செயலாளர் வேலாயுதம் முன்னாள் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் இல.வேலுச்சாமி மற்றும் பாமகவினர் நகராட்சி ஆணையர் ராஜ விஜயகாமராஜிடம் ஒதுக்கீடு சம்மந்தமான கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது மனுவை பெற்றுக் கொண்ட ஆணையரிடம் மனு பெற்றுக் கொண்டதற்கான ரசீது கேட்டனர். அப்போது ஆணையர் மனுவை பெற்றதற்கான ரசீது தன்னால் தர முடியாது என்றும் வேண்டுமானால் அலுவலர்களிடம் மனு பெற்றதற்கான சீல் வைத்து தருவதாக கூறினார்.
ஆனால் பாமகவினர் ஆணையர் மனு பெற்றதற்கான கையெழுத்து இட்டு ரசீது தர வேண்டும் என கூறினர். இதனால் ஆணையருக்கும் பாமகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆரணி டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் பாமகவினரை சமாதானப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து பாமகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.