கசப்பான பொங்கலாகி விட்டது, மண்பாண்ட தொழிலாளர்கள்
தொடர் மழையினால் வியாபாரம் இன்றி மண்பாண்ட தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இனிப்பான பொங்கல் போய் கசப்பான பொங்கலாக மாறிவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே மண்பானையில் பொங்கல் வைத்து இயற்கையை வழிபட்டு கொண்டாடுவது தமிழர்களின் மரபாகும். தற்போது அனைவரும் பாரம்பரியத்தை நாடி செல்லும் இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு மண்பாண்ட விற்பனை சூடு பிடிக்கவில்லை என்று மண்பாண்ட விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மண் பானைகள் வாங்க பொதுமக்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வருட காலமாக கொரோனாவால் மிகப்பெரிய வாழ்வாதாரத்தை இழந்து, வருமானத்திற்கு வரும் பொங்கல் பண்டிகையை பெரிதும் நம்பி இருந்ததாகவும், ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் விற்பனை இன்றி மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளதாகவும், இந்தாண்டு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கசப்பான பொங்கல் ஆகவே அமைந்து விட்டதாகவும் அவர்கள் கண்ணீருடன் கூறினார்கள்.