பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த கோரி போராட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி வருகிற 28ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக புதிய ஓய்வூதிய ஒழிப்பு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சையில் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தின் விளக்கக் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடரிக் எங்கல்ஸ் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த ஒருங்கிணைப்பாளர்- பிரெடரிக் எங்கல்ஸ் கூறும் போது, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தால் 6 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் காலத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும், பழைய ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்.
அதிமுக அரசு அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து போராடி வருகிறோம். ஆதரவற்றோர் இறந்தால் இறுதிச் சடங்குக்காக 1000 ரூபாய் வழங்கப்படும். அந்த 1000 ரூபாய் கூட 30 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே ஓய்வூதியம், ஓய்வுகால பணப்பலன்களும் கிடைக்கவில்லை என்பதால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட கோரி வரும் 28 ம் தேதி மாநிலம் முழுவதிலும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.