குற்றால அருவிகளில் சுற்றுலாபயணிகள் குளிக்க தடை
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் குற்றாலம் மெயின்அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையம், ஆலங்குளம், சங்கரன்கோவில் வாசுதேவநல்லூர் சுற்று வட்டார பகுதியில் தொடர் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
குற்றாலம் மெயின்அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் குற்றாலம் பிரதான அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். அதே போல் பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் அங்கேயும் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.