குழாய் உடைந்து சாயக் கழிவுநீர் வெளியேற்றம் பொதுமக்கள் அச்சம்
கரூரில் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான குழாய்களில் இருந்து சாயக்கழிவு நீர் வெளியேறியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கரூர் நகருக்கு அருகில் உள்ள ஆண்டான்கோயில் கீழ்பாகம் ஊராட்சிக்குட்பட்ட சக்தி நகரில் இன்று சாலையோரம் பூமிக்கடியில் பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் உடைந்து அதிலிருந்து சாயக்கழிவு நீர் அதிகளவில் வெளியேறியது. இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.அதிகாரிகள் அங்கு சென்று பார்த்த போது பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் உடைந்து அதிலிருந்து சாயக்கழிவு நீர் வெளியேறுவது தெரியவந்தது. இது குறித்து அங்கு விசாரித்தபோது,
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் நகரைச் சுற்றி 450 சாயப்பட்டறைகள் இருந்தன. அந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாய கழிவு நீர், கரூர் முழுவதும் 8 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிப்பு நிலையங்களுக்கு பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டது.இந்நிலையில் 2012ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி சாயப்பட்டறைகள் மறு சுழற்சி அடிப்படையில் சாயக் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாத சாயப்பட்டறைகளை மூட வேண்டுமென உத்தரவிட்டது.இதையடுத்து சாயப்பட்டறைகளும், 8 பொது சுத்திகரிப்பு நிலையங்களும் மூடப்பட்டன.
ஆனால் அந்த 450 சாயப் பட்டறைகளில் இருந்து பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சாயக்கழிவு நீரை எடுத்துச் செல்வதற்காக பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் அப்படியே கைவிடப்பட்டன. இந்நிலையில், இன்று அப்படி கைவிடப்பட்ட ஒரு குழாயில் இருந்து தான் அதிக அளவில் சாயக்கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடியது.இதனால் மூடப்பட்ட சாயப்பட்டறைகள் சட்டவிரோதமாக இயங்கி சாயக் கழிவு நீரை சுத்திகரிக்காமல் குழாய்களில் வெளியேற்றுவதாக பொதுமக்கள் சந்தேகம் அடைந்தனர்.இந்த சந்தேகத்தை சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய கரூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ரவிச்சந்திரனிடம் எழுப்பினர்.குழாய்களில் இருந்து வெளியேறிய நீரை ஆய்வு செய்து சாயக் கழிவு நீர் என நிரூபணம் ஆன பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.