காதல் ஜோடி எஸ்.பி., அலுவலகத்தில் பரபரப்பு புகார்
சாதி மறுப்பு திருமணம் செய்த மதுரையை சேர்ந்த காதலர்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி விருதுநகர் மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் அபிமன்யு (23). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அதே ஆலையில் பணிபுரிந்த மதுரை கல்மேடு பகுதியை சேர்ந்த வில்வராணி (22) என்ற பெண்ணும் அபிமன்யுவும் கடந்த ஒன்றரை வருட காலமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்த பொழுது கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் காதலை ஏற்கவில்லை என கூறி அபிமன்யு மற்றும் வில்வராணி இருவரும் கடந்த 1ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி விருதுநகரில் உள்ள அம்மன் கோவிலில் தனது நண்பர்களுடன் சேர்ந்து திருமணம் முடித்துள்ளனர்.
சாதி மறுப்பு திருமணம் செய்த எங்களுக்கு இரு வீட்டாரின் தரப்பில் இருந்தும் பிரிக்க முயற்சி மேற்கொள்வதாகவும் மேலும் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறி காதலர்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி இன்று விருதுநகர் மாவட்ட எஸ்பியிடம் மனு கொடுத்தனர்.