மன்னர் காலத்து இசைக்கருவியை உருவாக்கி சாதனை
தஞ்சாவூரில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான மயூரி யாழை உருவாக்கி வீணை இசைக்கலைஞர் சாதனை படைத்துள்ளார்.
தஞ்சாவூரில் வீணை தயாரிப்பாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் மற்றும் தொழிலாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் வீணை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் சீனிவாசபுரத்தை சேர்ந்த வீணை தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் 5 தலைமுறைகளாக வீணை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தான் செய்யும் வீணைகளில் புதுமை படைக்க வேண்டும் என்ற நோக்கில் தற்போது மயூரி யாழ் செய்து புதுமை படைத்துள்ளார். மயூரி யாழ் என்பது மன்னர்கள் காலத்தில் சுமார் 100 வருடத்திற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளில் ஒன்றாகும். நாளடைவில் அந்த இசைக்கருவி மறைந்து விட்ட நிலையில் தற்போது அந்த யாழ் இசைக்கருவியை மீட்டெடுக்கும் வகையில் புதியதாக மயூரி யாழ் செய்து அசத்தி உள்ளார்.
இதுகுறித்து வீணை இசைக்கலைஞர் ராஜேந்திரன் கூறும்போது வீணை தயாரிப்பில் புதுமையாக செய்ய வேண்டும் என்ற நோக்கில் தஞ்சாவூரில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஓலைச்சுவடிகளை பார்த்து யாழ் என்பது எப்படி இருக்கும் என்பதை தெரிந்து அதன்படி அன்னபட்சி பறவை போன்று மயில் மூக்கு வைத்து சுரங்கள் அமைத்து வாசிப்பதற்கு ஏற்றவாறு இதனை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.அவரது இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.