நாமக்கல்: கொரோனா வார்டில் பாதுகாப்பு உடை அணிந்து கலெக்டர் ஆய்வு
நாமக்கல் கலெக்டர் பாதுகாப்பு கவச உடை அணிந்து, அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டம் தளர்வுகள் அளிக்க முடியாத நோய்த்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகத்தான் உள்ளது. இந்த நிலையை ஒன்றிரண்டு வாரங்களுக்குள் மாற்றி முழுமையாக நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட மாவட்டமாக உருவாக்க வேண்டும்.
எனவே உள்ளாட்சி நிர்வாகங்கள் தங்கள் பகுதியில் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி சரியாக நடைபெறுவதை உறுதி செய்வதுடன் சளி, இருமல், காய்ச்சல் உள்ள நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர், கலெக்டர் ஸ்ரேயா சிங் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பாதுகாப்பு கவச உடையணிந்து கொரோனா சிகிச்சை வார்டிற்கு நேரில் சென்று, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஒவ்வொருவராக கேட்டறிந்தார். உணவு வழங்கப்படுவது குறித்தும், தரம் மற்றும் சுவையின் திருப்தி குறித்தும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார். அதை தொடர்ந்து, நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.