கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா

கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா

பூங்கரகங்களை  தலையில் சுமந்தபடி வீதிகளில் வலம் வந்த பக்தா்கள். 

கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த கானலாபாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலின் கூழ்வாா்த்தல் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

நேற்று அதிகாலையில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் மலர் மாலைகளால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு தீபாரதனை நடைபெற்றது.

தொடா்ந்து, கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூங்கரகங்களை பக்தா்கள் தலையில் சுமந்தபடி கிராம வீதிகளில் வலம் வந்தனா். பூங்கரகத்துக்குப் பின்னால் டிராக்டரில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் முத்தாலம்மன், ரேணுகாம்பாள், அம்மச்சாா் அம்மன், கிருஷ்ணா் சுவாதிகள் வலம் வந்தனா். வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா சுப்ரமணியன் தனது சொந்த செலவில் ரூபாய் 8.25 லட்சம் மதிப்பிலான டிராக்டர் மற்றும் சகடை ஆகியவற்றை சுவாமி வீதி உலாவிற்கு பயன்படுத்துவதற்காக வழங்கினார்.

இந்த புதிய டிராக்டர் மற்றும் சகடையில் முத்தாலம்மன், ரேணுகாம்பாள், அம்மச்சார் அம்மன் மற்றும் கிருஷ்ணர் ஆகிய உற்சவர் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு வீதி உலா வந்து கோயிலை அடைந்தது.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அவரவர் வீடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட கூழை கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த கொப்பரைகளில் ஊற்றினர். இதை அடுத்து கூழ் வார்த்தல் நிகழ்ச்சி மற்றும் ஸ்ரீ சத்குரு மடம் இளைஞரணி அன்னதான கமிட்டியின் சார்பாகவும் கூழ் , அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

விழாவில் கீழ்பெண்ணாத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆறுமுகம், துணை செயலாளர் சோமாசி பாடி சிவகுமார், மாவட்ட பிரதிநிதி தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள், இந்நாள் முன்னாள் ஒன்றிய செயலாளர், வார்டு உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விழாவையொட்டி ரேணுகாம்பாள் கோவில் திடலில் ஆன்மீக நாடகம் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு நடைபெறும்.

காட்டு மலையனூர்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டம் காட்டு மலையனூர் ஊராட்சி வெள்ளக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலில் இன்று சித்திரை மாத கூழ் வார்க்கும் திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து முத்துமாரி அம்மனுக்கு சக்தி கிரகம் ஜோடித்து பக்தர்கள் கரகங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலம் சென்றனர்.

பின்னர் ஊர்வலம் முடித்தவுடன் பொதுமக்கள் கோவிலில் கூழ் ஊற்றி அம்மனை வழிபட்டனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.

Next Story