எஸ்.வாழவந்தி மாரியம்மன் சித்திரைத் திருவிழா: பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
எஸ்.வாழவந்தி அருள்மிகு மாரியம்மன் சித்திரைத் தேர்த்திருவிழாவில், இன்று ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
HIGHLIGHTS
எஸ்.வாழவந்தி அருள்மிகு மாரியம்மன் சித்திரைத் தேர்த்திருவிழாவில், இன்று ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள சர்க்கார் வாழவந்தியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் எஸ். வாழவந்தி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 18 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட கோயிலாகும், ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு சித்திரைத் தேர்த்திருவிழா, கடந்த தொடர்ந்து 9ம் தேதி, எஸ்.வாழவந்தி சந்தையில் அல் எடுத்து 10 ந்தேதி செவ்வாய்க்கிழமை, அதிகாலை 6 மணி அளவில் கம்பம் ஊன்றி காப்பு கட்டி திருவிழா தொடங்கியது, தொடர்ந்து நாள்தோறும் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கோயில் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டனர்.
கடந்த15 ஆம் தேதி திங்கட்கிழமை மறுகாப்பு கட்டப்பட்டது. பின்னர், தினசரி சுவாமி இரவு திருவீதி உலாநிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று 21 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வடி சோறு பூஜை நடைபெற்று, இன்று திங்கள்கிழமை அதிகாலை 3 மணி அளவில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர், கோயில் முன்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீக்குண்டம் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சுவாமி உற்சவர், பாலப்பட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றிற்கு எடுத்துச் சென்று, பக்தர்கள் புனித நீராடி, சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனைகள் செய்து, மலர்களால் அலங்காரம் செய்து, அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் சுவாமியை சப்பரத்தில் பக்தர்கள் தூக்கி கொண்டு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் ஏராளமான ஆண்களும், பெண்களும் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்கள். தொடர்ந்து பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் மற்றும் உருளு தண்டம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சுவாமிக்கு கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெறும். காலை 10 மணி அளவில் சுவாமி 30 அடி உயரம் கொண்ட தேரில் ரதம் ஏறும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 5 மணியளவில் திரளான பக்தர்கள் தேவடம் பிடித்து தேர் இழுப்பார்கள்.
புதன்கிழமை அதிகாலை கம்பம் பிடுங்கி சிங்கார பாலியில் விடப்படும். தொடர்ந்து மாலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும், விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர் மற்றும் கோயில் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.