டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?

டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?

அர்விந்த் கெஜ்ரிவால் (கோப்பு படம்)

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மிக மிக மோசமான சமுதாய சீர்கேடான ஊழலுக்காக விசாரிக்கப்பட்டு வரும் குற்றம் சாட்டப்பட்டவர்!

கமிஷன் பணம் சம்பாதிப்பதற்காக மது அருந்துவோர் வயது வரம்பை 21 ல் இருந்து 16 ஆக குறைத்தவர். மது வியாபார நேரத்தை இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரைக்கும் என நீட்டிப்பு செய்தவர். டெல்லியில் ஒவ்வொரு வார்டுக்கும் இரண்டு மதுக்கடைகளை அதிகம் திறந்தவர்.

இத்தனையும் டெல்லியின் வளர்ச்சிக்காக என சொன்னால் கைகொட்டி சிரிப்பார்களே. தனது குடும்ப வளர்ச்சிக்காக டெல்லி சமுதாயத்தையே சீரழிக்க திட்டமிட்டார் கெஜ்ரிவால்.

செய்தது குற்றம் இல்லை என்றால் ஏன் புதிய மதுக்கொள்கையை டெல்லி அரசு திரும்ப பெற்றிருக்க வேண்டும்?. பணம் வாங்குவதற்காகவே புதிய மதுக்கொள்கை வகுக்கப்பட்டது. பணம் வாங்கப்பட்டது. ஊழல் பணம் முறைகேடான பண பரிவர்த்தனையாக வங்கிகளில் பயணம் மேற்கொண்டது. ஆதாரங்கள் சிக்கியதால் புதிய மதுக்கொள்கை திரும்பப் பெறப்பட்டது. துணை முதலமைச்சர் கைது செய்யப்பட்டார். துணை முதல்வர் சொல்லிய ஒப்புதல் வாக்குமூலத்தால் முதல்வரும் கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்கு வாருங்கள் என 9 முறை 9 மாதமாக காத்திருந்தும் இவர் வரவில்லை. காத்திருந்தது பாரதிய ஜனதா கட்சியல்ல. இந்திய அரசின் புலனாய்வுத் துறை. இந்த துறையை நிறுவியது பாஜக அரசல்ல, காங்கிரஸ் அரசு. இந்திய விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகளில் ஆளுங்கட்சியோ எதிர்கட்சிகளோ தலையிட முடியாது.

பாரதிய ஜனதா கட்சி அவ்வண்ணம் தலையிடுவதில்லை. 9 முறை அழைப்பு விடுத்தும், நியாயமான விசாரணைக்கு வராததால், குற்றச்சாட்டு இன்னும் உறுதியானது. விசாரணை அமைப்புகள் நீதிமன்றத்தை நாடின. நீதிமன்றம் கைது செய்து அழைத்து வந்து விசாரணையை துவங்குங்கள் என உத்தரவிட்டதால் தான் டெல்லி முதலமைச்சர் கைது செய்யப்பட்டார்.

மார்ச் மாதம் 21 ம் தேதி கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை மே 9 வரை நீதிமன்றம் விடுவிக்கவில்லை. இப்போதும் நீதிமன்றம் விடுவிக்கவில்லை. ஜாமீன்கூட நீதிமன்றம் வழங்கவில்லை. சாதாரண குற்றமாக இருந்திருந்தால், நான்குநாள் விசாரணைக்கு பிறகு நீதிமன்றம் அனுப்பியிருக்கும். குற்றம் சமுதாய விரோதமானதாக இருப்பதாலேயே நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுக்கிறது.

விசாரணை அமைப்புகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுக்கிறது. இப்போதுகூட நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் தான் வழங்கியுள்ளது. இதே குற்றத்திற்காக சிறையில் இருக்கும் டெல்லி துணை முதல்வரும் இவரின் கூட்டு குற்றவாளியுமான மனோஜ்சிசோடியா, தெலுங்கானா முன்னால் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா இன்னும் ஓரிரு டெல்லி அரசாங்க அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்காத உச்ச நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் தான் வழங்கியுள்ளது.

ஜூன் 2 ம் தேதி இவர் மீண்டும் ஜெயிலுக்கு போகவேண்டும். சினிமாவில் அம்மாவின் ஈமச்சடங்கில் கலந்துக் கொள்ள ஜாமீன் கேட்பது போல்,தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டதால் இந்த இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி ஐ.என்.டி.ஐ கூட்டணி மகிழ்கிறதாம். ஊழல் வழக்கில் ஜெயிலுக்குப்போய் இடைக்கால ஜாமீனில் வந்தவர் ஓட்டு கேட்கபோகிறாராம். டெல்லிவாசிகள் எல்லாம் ஊழல் குற்றச்சாட்டில் கம்பி எண்ணியவருக்குதான்,.ஓட்டு போடுவார்களாம். இது ஐ.என்.டி.ஐ கூட்டணியின் ஜெயில் கனவு.

அரவிந்த் கெஜ்ரிவால் நல்லாட்சி புரிந்தாலே நாடாளுமன்ற தேர்தல் என்றால் டெல்லி மாநகர மக்கள் 7 தொகுதிகளிலும் மோடி தான் பிரதமர் ஆகவேண்டும் என்பதற்காக பாஜகவுக்குதான் வாக்களிப்பார்கள். எம்.எல்.எ தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களித்தாலும் டெல்லி மக்கள் நாடாளுமன்றத்திற்கு பாஜகவுக்குதான் வாக்களிப்பார்கள் என்பதுதான் வரலாறு.

இந்த முறை டெல்லி முதல்வர் ஜாமீனில்கூட நீதிமன்றம் விடுவிக்க மறுக்கும் அளவுக்கு சமுதாய விரோத ஊழல் வழக்கில் சிக்கி இருப்பதால் 7 தொகுதிகளிலும் காங்கிரசும் ஆம் ஆத்மியும் வைப்புத்தொகையை இழக்கும் என்பதுதான் களநிலவரமாக உள்ளது. என்கிறார்கள் தலைநகரில்.

நன்றி -குமரிகிருஷ்ணன்

Tags

Next Story