நாமக்கல்லில் கோயில் அர்ச்சகர், பணியாளர்களுக்கு நிவாரண உதவி
நாமக்கல் நகரில் திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் வழங்கினார்.
HIGHLIGHTS
கொரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பெரும்பாலான திருக்கோயில்கள் மூடப்பட்டுள்ளன. பக்தர்கள் வருகை இல்லாததால் பெரும்பாலான அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி திருக்கோயில் பணியாளர்களுக்கு தலா ரூ.4,000 ரொக்கம் மற்றும் 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப் பொருட்களை வழங்கிட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 343 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள்மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.
எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, இந்துசமய அறநிலையத்துறை இணை கமிஷனர் மங்கையற்கரசி, உதவி கமிஷனர் தமிழரசு, ஆஞ்சநேயர் கோயில் செயல் அலுவலர் ரமேஷ், உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.