வாடிக்கையாளர் போல வந்து காரை ஓட்டிச் சென்ற மர்ம நபர்கள் : நூதன கொள்ளை
நாமக்கல் பழைய கார் விற்பனை நிலையத்தில், மர்ம நபர்கள் நூதன முறையில் காரை கடத்திச் சென்றது, பரபரப்பை ஏற்படுத்தியது.
HIGHLIGHTS
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட, நல்லிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பழைய கார்கள் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான காரை வாங்க விரும்புவதாக மேலாளர் ரமேஷிடம் கூறி உள்ளனர். மேலும் அதற்கு முன்பணமாக ரூ.2 லட்சம் தருவதாக தெரிவித்து உள்ளனர். அதை நம்பி அந்த விற்பனை நிலையத்தின் மேலாளர் ரமேஷ், 2 பேரையும் காரை ஓட்டி பார்க்க அழைத்து சென்றுள்ளார். நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காரை சிறிது தூரம் ஓட்டிச் சென்ற பிறகு, காரில் அதிக சத்தம் வருவதாக, அதை நிறுத்தினர். பின்னர் மேனேஜர் ரமேஷை கீழே தள்ளிவிட்டு அவர்கள், காரை அதிவேகமாக கடத்திச் சென்றுவிட்டனர்.
தகவல் கிடைத்ததும், நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் நல்லிபாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த காரின் உரிமையாளர் ஏற்கனவே, காருக்கு கடன் வாங்கியதும், கடன் தொகையை திருப்பி செலுத்தாமல், அந்த காரை விற்பனைக்கு கொண்டு வந்து, தனியார் விற்பனை நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனால் பைனான்ஸ் கம்பெனியினர் காரை கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.