வீடுகளை காலி செய்ய அனுப்பப்பட்ட கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது
வீடுகளை காலி செய்ய அனுப்பப்பட்ட கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என போளூர் களியம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் மனு
HIGHLIGHTS
வீடுகளை காலி செய்ய அனுப்பப்பட்ட கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று போளூர் தாலுகாவில் உள்ள களியம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
போளூர் தாலுகா களியம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் 89 கான்கிரீட் வீடுகள் உள்ளன. நாங்கள் 3 தலைமுறையாக அந்த பகுதியில் வசித்து வருகின்றோம். தற்போது நாங்கள் இருக்கும் பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதி என்று கூறி எங்கள் வீடுகளை காலி செய்ய அரசு தரப்பில் கடிதம் வழங்கப்பட்டு உள்ளது.
எங்கள் குடும்பத்தினர் யாரும் அரசு வேலையிலோ, நிரந்தர ஊதிய பணியிலோ இல்லை. அனைவரும் கூலி தொழில் தான் செய்து வருகின்றோம். எங்களால் வேறு இடத்தில் வீடு கட்டவோ, குடிபெயர்ந்து செல்லவோ வசதியில்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றோம்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும், அரசின் சொத்துக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி வசித்து வருகின்றோம். எனவே வீடுகளை காலி செய்ய அனுப்பப்பட்ட கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அவர்கள் கூறினர்.