வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல்
திருவண்ணாமலையில் வாடகை பாக்கி செலுத்தாத 5 நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் மத்திய பேருந்து நிலையம், ஜோதி பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் 388 கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் கடை வைத்திருக்கும் சிலர் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். ரூ.11 கோடியே 14 லட்சத்து 71 ஆயிரம் கடை வாடகை பணம் நிலுவையில் உள்ளது.
வாடகை பாக்கியுள்ள கடைகளுக்கு நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பாக்கி பணத்தை உடனடியாக செலுத்த கோரி நோட்டீசு வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.97 லட்சத்து 99 ஆயிரம் வசூலானது. மீதமுள்ள ரூ.10 கோடியே 14 லட்சத்து 72 ஆயிரத்தை வசூல் செய்யும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பல வருடங்களாக வாடகை பாக்கி செலுத்தாத திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள 2 கடைகள் மற்றும் ஜோதி பூ மார்க்கெட்டில் உள்ள 3 கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். அப்போது ஜோதி மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகள் சிலர் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாடகை பாக்கி செலுத்தாத வியாபாரிகள் உடனடியாக வாடகை பாக்கியை செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறினர்