காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
![காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..! காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!](https://www.nativenews.in/h-upload/2024/05/16/1904283-img-20240516-wa0025.webp)
காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு விழிப்புணர்வு தின நிகழ்ச்சிகள் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுக்க டெங்கு நோயை தடுக்கும் நோக்கில் மே மாதம் 16ம் நாள் தேசிய டெங்கு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
சமீப காலமாக பருவமழையை ஒட்டி வரும் காலங்களில் டெங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மிகமுக்கியமாக நகரமாயமாக்கல், அதிகரித்து வரும் கட்டுமான நடவடிக்கைகள், வேகமாக மக்களின் இடப்பெயர்வு, சமூக மற்றும் வீட்டளவில் திடக்கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்தாதது, மக்களின் பாதுகாப்பற்ற முறையில் நீர் சேமிக்கும் பழக்கம் போன்ற காரணிகள் டெங்கு பரவலுக்கு மிக மிக முக்கிய காரணமாகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் வழிக்காட்டுதலின்படி, காஞ்சிபுரம் மாநகராட்சியில் 80 டெங்கு நோய்த்தடுப்பு பணியாளர்கள் மாநகராட்சி 51 வார்டுகளில் பணியமர்த்தப்பட்டு நோய்த் தடுப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது தென்கிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து கொண்டு வருகிறது. அதனை தொடந்து காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த டெங்கு பணியாளர்களுக்கு இன்று பெரிய காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள திருநீலகண்டர் திருமண மாளிகையில் தேசிய டெங்கு தினம் அனுசரிக்கப்பட்டது-
இந்நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் மருத்துவர் அருள்நம்பி தலைமையில், துப்புரவு அலுவலர் திரு.கே.சுகவனம் முன்னிலையில் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர்.செந்தில் திட்டத்தின் விளக்கவுரை ஆற்றினார்.
மாவட்ட மலேரிய அலுவலர் தமணிவர்மா திறன் மேம்பாட்டு பயிற்சி டெங்கு பணியாளர்களுக்கு விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர், இளநிலை பூச்சியியல் வள்ளுநர், மற்றும் டெங்கு பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டது. டெங்கு பணியாளர்களுக்கு கொசு ஒழிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தின் முடிவில் சிவக்குமார் துப்புரவு அலுவலர் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu