தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் டிஜிபி சங்கர் ஜிவால் ஆய்வு
தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலில் டிஜிபி சங்கர் ஜிவால் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ள நிலையில் கோயில் மற்றும் மாட வீதி பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இத்தீப திருவிழாவானது 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நிறைவு நாளான 26 ஆம் தேதியன்று கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும்.
அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் ஏற்றப்படும் பரணி தீபம், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் ஆகியவற்றைக் காணவும், கிரிவலம் செல்லவும் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதன் முன்னேற்பாடாக திருவண்ணாமலை நகரின் 9 சாலைகளிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
இப்பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்தும் விதமாக பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் ஆய்வு மேற்கொண்டார்.
கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து ஆயிரம்கால் மண்டபம், பெரிய நந்தி, கிளி கோபுரம் வழியாக கோயில் மூன்றாம் பிராகாரம் வரை சென்ற சங்கா் ஜிவால், கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
பிறகு, தீபத் திருவிழா தற்காலிகப் பேருந்து நிலையங்கள் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் அவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் கண்ணன், வேலூா் சரக துணைத் தலைவா் முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், கோயில் இணை ஆணையா் ஜோதி, அறங்காவலா் குழுத் தலைவா் ஜீவானந்தம், அறங்காவலா்கள் டி.வி.எஸ்.ராஜாராம், கோமதி குணசேகரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.