வெண்ணந்தூர் அருகே பிளஸ் 2 மாணவி கடத்தல்: போக்சோவில் 3 வாலிபர்கள் கைது
வெண்ணந்தூர் அருகே பிளஸ் 2 மாணவியை கடத்திச்சென்ற 3 பேரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
இராசிபுரம் தாலுக்கா, வெண்ணந்தூர் அடுத்த தொட்டிப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அந்த மாணவியை அக்கரைப்பட்டியை சேர்ந்த சாமிநாதன் மகன் நந்தகுமார் (24) என்பவர், ஆசைவார்த்தை கூறி 9 பவுன் நகையுடன் கடத்திச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியைத் தேடி வந்தனர்.இதையறிந்த நந்தகுமார் மற்றும் அவருடைய அண்ணன்கள் ரத்தினவேல் (26), சதீஸ்குமார் (32) ஆகியோர் மாணவியை திருப்பி அழைத்துவந்து அவரது வீட்டில் விட்டு விட்டு தலைமறைவாகினர்.
இந்த நிலையில் வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி. போக்சோ சட்டத்தின்கீழ் நந்தகுமாரை கைது செய்தார். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில், மாணவி கடத்தலுக்கு உதவிய அண்ணன்கள் சதீஸ்குமார், ரத்தினவேல் ஆகியோரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் ரிமாண்ட் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.