பரவும் புது வகை கொரோனா: கோவையில் கண்காணிப்பு தீவிரம்
தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா நோய்த் தொற்றால், கோவை மாவட்டத்தில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கூறினார்
HIGHLIGHTS
கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தொற்றால் உலக அளவில் பெரியளவில் பாதிப்பில்லாத நிலையில் தற்போது அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா நோய்த் தொற்று மிகத் தீவிரமாக பரவி வருவதாக மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்தியாவில் குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில் புதிய வகை கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா நோய்த் தொற்று கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக அவா் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் தற்போது பெரியளவில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு இல்லை. வெளிநாடுகளில் நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கும்போது கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் அருணா கூறுகையில், புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிவதற்காக புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுபவா்களின் சளி மாதிரிகள் சென்னையிலுள்ள மாநில பொது சுகாதாரத் துறை ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
கடந்த இரண்டு நாள்களாக கோவையில் ஒருவருக்குகூட நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடா்ந்து கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வருபவா்களுக்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையம் சார்பில் தொ்மல் ஸ்கேனா் மூலம் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளவா்களுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்