கொல்லிமலையில் 2 நாட்களுக்கு வல்வில் ஓரி விழா
கொல்லிமலையில் தமிழக அரசின் சார்பில் 2 நாட்களுக்கு வல்வில் ஓரி விழா நடைபெறுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வருகிற ஆக. 2, 3 தேதிகளில், தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா பசுமை விழாவாக நடைபெறும் என கலெக்டர் தெரிவித்தார்.
கொல்லிமலையில், தமிழக அரசின் சார்பில், வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்துவது சம்மந்தமான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசிய கலெக்டர் ஸ்ரேயாசிங், தமிழக அரசின் சார்பில், கொல்லிமøயில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்கள் வல்வில் ஓரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் வருகின்ற ஆடி 17 மற்றும் 18 (ஆக.2 மற்றும் 3ம் தேதி) ஆகிய 2 நாட்கள் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
விழாவையொட்டி கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கில் அனைத்த அரசுத் துறைகளும் பங்கேற்கும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு ஓரிவிழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க்கண்காட்சி பசுமை விழாவாக நடத்தப்பட உள்ளது. அரசுத் துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஈடுபாட்டுடன் மேற்கொண்டு விழாவினை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பாராட்டும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும். ஒரு முறை பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டாயம் பயன்படுத்த கூடாது.
மலைவாழ் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் கலை பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வில் வித்தை சங்கத்தின் சார்பில் வில்வித்தை விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. அரசுத்துறைகளின் மூலம் மலை வாழ் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறை சார்பில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி நடத்தப்படவுள்ளது என கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், டிஆர்ஓ கதிரேசன், ஆர்டிஓக்கள் நாமக்கல் மஞ்சுளா, திருச்செங்கோடு இளவரசி, பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.