கோயில்களில் கூழ் வழங்க ரூ.5 ஆயிரம் டன் அரிசி: இந்து மக்கள் கட்சி கோரிக்கை
இந்து கோயில்களில் கூழ் வழங்குவதற்காக, தமிழக அரசு 5,000 டன் அரிசியை இலவசமாக வழங்க வேண்டும் என, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
HIGHLIGHTS
ஆடி மாதம் இந்து கோயில்களில் கூழ் வழங்குவதற்காக, தமிழக அரசு 5,000 டன் அரிசியை இலவசமாக வழங்க வேண்டும் என, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
இது குறித்து, அர்ஜூன் சம்பத் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக கோர்ட்டுகளில், இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒன்று, பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை, தி.மு.க., அமைச்சர்கள் உள்பட, முக்கிய நிர்வாகிகள் குறித்த ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். அதில், தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலுவை பற்றி குறிப்பிட்டிருந்தார். அதற்காக, மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அந்த வழக்கை எதிர்கொண்டார். சட்டத்தை, சட்டத்தால் எதிர்கொள்வோம் என்ற அடிப்படையில், அண்ணாமலை, நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகினார். அதேபோல், செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை விசாரிக்கலாம். அவரை கஷ்டடி எடுக்கலாம்.
நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தலாம் என, மூன்றாவது நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். செந்தில்பாலாஜி, சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டும். அவர் உண்மையிலேயே சுத்தமானவராக இருந்தால், நாட்டின் நீதிமாண்புகளை நம்புபவராக இருந்தால், செந்தில்பாலாஜி வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். இதற்கு, தமிழக அரசு, அவரை அமைச்சராக வைத்துக்கொண்டு விசாரணைக்கு தடை ஏற்படுத்தக் கூடாது. உடனடியாக செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவர், ஆட்சியில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு இருந்தது. தமிழகத்துக்கு காமராஜர் ஆட்சி மீண்டும் தேவை. காவிரி பிரச்னையில், கர்நாடகா காங்கிரஸ் துணை முதல்வர் சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று சொல்லியிருக்கிறார். அதற்காக, மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை கிளியரன்ஸ் கொடுக்கவில்லை. காமராஜர் ஆட்சி தேசிய மாடல் ஆட்சியாகும்.
திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக, தேசிய மாடல் ஆட்சி கொண்டுவர வேண்டும். அதற்காக, பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை, வரும் 29ம் தேதி, ராமேஸ்வரத்தில் இருந்து என் மண்; என் மக்கள்; என் தேசம் என்ற பாதயாத்திரையை துவங்குகிறார். திராவிட மாடல் தி.முக., ஆட்சியில், தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சாராயம், போதை பொருட்கள், லஞ்சம், ஊழல், விலைவாசி உயர்வு காணப்படுகிறது. இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டிய ஆட்சி. அண்ணாமலை யாத்திரை நிச்சயமாக தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
வரும் மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உகந்தமாதம். அனைத்து அம்மன் கோவில்களில், கூழ் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும். ரம்ஜான் நோன்புக்கு, 5,000 மெட்ரிக் டன் அரிசி வழங்கியது தமிழக அரசு. அறநிலையத்துறை மூலம் அனைத்து அம்மன் கோவில்களுக்கும் கூழ் வார்ப்பதற்கு, ஒரு மாவட்டத்துக்கு, 5,000 மெட்ரிக் டன் வீதம் இலவசமாக அரிசி வழங்க வேண்டும்.
தொடர்ந்து, இந்து கடவுள்களை கேவலமாக விமர்சனம் செய்வதை தர்மபுரி எம்.பி. செந்தில் வாடிக்கையாக கொண்டுள்ளார். அதனால், அவரது எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும். வரும், 23ல், இந்து மக்கள் கட்சி சார்பில், ஒரே நாடு, ஒரே சட்டம், என பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சென்னையில் மாநாடு நடத்தப்படுகிறது. பொது சிவில் சட்டம் எதிர்ப்பை தி.மு.க. மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் கூறினார்.