நாமக்கல் அருகே குடிநீர் விநியோகம் செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
நாமக்கல் அருகே குடிநீர் விநியோகம் செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள பட்டத்தையன்குட்டை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் அரவிந்த் (18). துரைராஜ் ஆட்டோ மூலம், டீக்கடைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறார். இதற்கு அரவிந்தன் துணையாக இருந்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு நாமக்கல் அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில், கடை ஒன்றிற்கு மின்சார மோட்டாரை இயக்கி, குழாய் வழியாக அரவிந்த் குடிநீர் விநியோகம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரவிந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.