நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
நெல்லை மாவட்டத்தில், 13 லட்சத்து 63 ஆயிரத்து 458 வாக்களர்கள் உள்ளனர் என, ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.
HIGHLIGHTS
நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், அவர் வெளியிட்டார். அதன்படி, மாவட்டத்தில் 13 லட்சத்து 63 ஆயிரத்து 458 வாக்களர்கள் உள்ளனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு ஆட்சியர் அளித்த பேட்டி: வரைவு வாக்காளர்பட்டியலின்படி நெல்லை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 67 ஆயிரத்து 74 பேரும்; பெண் வாக்காளர்கள், 6 லட்சத்து 96 ஆயிரத்து 271 பேரும், இதரபிரிவினர் 113 பேரும் என, மொத்தம் 13 லட்சத்து 63 ஆயிரத்து 458 வாக்காளர்கள் உள்ளனர்.
மார்ச் முதல், அக்டோபர் மாதம் வரை 7302 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் . நெல்லை மாவட்டத்தில் தொகுதிவாரியான வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புப்படி புதிதாக 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1483 வாக்குச்சாவடிகள் உள்ளன. 01-01-2022-ஐ அன்று, 18 வயது நிறைவடைந்தவர்கள் அனைவரும் வாக்காளர்பட்டியலில் தங்கள் பெயரினை புதிதாக சேர்த்திட மனு அளிக்கலாம். இதற்காக வரும் 13, 14, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரை, கடந்த இரண்டு நாட்களில் சராசரியாக 18 மில்லிமீட்டர் மழையே பெய்துள்ளது. பாபநாசம் அணை 92 சதவீதமும் , மணிமுத்தாறு அணையில் 40 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. தாமிரபரணி ஆற்றில் 60 ஆயிரம் கன அடித்தண்ணீர் வரை செல்லலாம். ஆனால் தற்போது 2 ஆயிரம் முதல், மூவாயிரம் கன அடி தண்ணீர் தான் செல்கிறது. எனவே மக்கள் அச்சப்படத்தேவையில்லை. இருந்த போதும், ஆற்றில் குளி்க்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று திருக்குறுங்குடி நம்பிகோவில், களக்காடு, தலையணை, காரையாறு அணைப்பகுதி ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டம் முழுவதும் 140 முகாம்கள். கடலோரப்பகுதியில் சுனாமி பேரிடர் முகாம் 7 ஆகியவை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.