ஸ்டெர்லைட் தொழிற்சாலை 2 வது அலகில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் தொடங்கியது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 290 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது
HIGHLIGHTS
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 290 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு மருத்துவ தேவைக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது இரண்டாவது அலகின் மூலமும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இன்று முதல் சோதனை ஓட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாட்டில் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜனை மட்டும் தயாரித்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 500, 550 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி அலகுகள் உள்ளது. இதில் முதல் அலகில் கடந்த 14ஆம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி துவங்கிய நிலையில் 4.82 மெட்ரிக்டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் திடீரென்று ஆக்சிஜன் குளிரூட்டும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி தடைபட்டது. அதனையடுத்து பழுது சரி செய்யப்பட்ட பின் கடந்த ௨௦ ஆம் தேதி முதல் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதுவரை ஆலையிலிருந்து 290 டன் ஆக்சிசன் உற்பத்தி செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியகுமரி, தென்காசி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் மருத்துவ தேவைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது ஆலையில் உள்ள இரண்டாவது அலகிலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனையடுத்து இந்த அலகில் இன்று முதல் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
இரண்டு அலகிலும் ஆக்சிசன் உற்பத்தியை தொடங்கினால் நாளொன்றுக்கு சுமார் 70 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.