தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள்
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலையில் 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
HIGHLIGHTS
உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ் புத்தாண்டு மற்றும், சித்திரை முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மையத்தில், கோட்டை பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார். தினசரி கட்டளைதாரர்கள் மூலம், காலை 9 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிசேகம் நடைபெறும்.
ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் ஞாயிற்றுக்கிழமை பக்தர்களின் சார்பில் பொது அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும். இன்று தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறபு பூஜைகள் நடைபெற்று வருகிறது. காலை 9 மணிக்கு, நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் சந்தனம், உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். கனகாபிசேகத்துடன் அபிசேகம் நிறைவு பெற்று, தொடர்ந்து சுவாமிக்குசிறப்பு அலங்காரம் நடைபெறும். பின்னர் 1 மணியளவில் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெறும். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை முதல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமானதால், வழக்கத்தை விட இன்று ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட தூரம் கியூவில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.