நாமக்கல் வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானம்
வருகிற 3ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை இளைஞர் நலன் மற்றம் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
HIGHLIGHTS
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில், உள்ள கிராம பஞ்சாயத்துக்கள், டவுன் பஞ்சாயத்துக்குள், நகராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், திமுக கிளைகளின் சார்பில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, பால் மற்றும் பிரட் வழங்கப்படும். மேலும், மார்ச் 1 அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்படும். இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் 700 இடங்களில் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாக்கள் சிறப்பாக நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 3ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, நாமக்கல் வருகிறார். மாவட்ட எல்லையில், மாவட்ட திமுக சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். 3ம் தேதி காலை 8 மணிக்கு சேந்தமங்கலம் அருகே நடைபெறும் ஜல்லிக்கப்பட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி துவக்கி வைக்கிறார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி இல்லத்திருமண விழா, 3ம் தேதி காலை 9 மணிக்கு, சேந்தமங்கலம் அருகே உள்ள வெட்டுக்காட்டில் நடைபெறுகிறது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணவிழாவை நடத்தி வைக்கிறார். பின்னர் காலை 11 மணிக்கு, நாமக்கல் நளா ஹோட்டலில், கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசுகிறார்.
மாலை 3 மணிக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் உருவச்சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பேசுகிறார். பின்னர் மோகனூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள, 70 அடி உயர கொடிக்கம்பத்தில், திமுக கொடியை ஏற்றி வைக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதன்பிறகு கரூர் மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, முன்னாள் எம்.பி சுந்தரம், நாமக்கல் நகராட்சித்தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, ஒன்றிய திமுக செயலாளர்கள் ராமசுவாமி, ஜெகநாதன், பாலசுப்ரமணியம், அசோக்குமார், நவலடி, நகர செயலாளர்கள் சிவகுமார், ராணா ஆனந்த், மகளிர் அணி தலைவர் ராணி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.