நாமக்கல் அண்ணா அரசு கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்பு மாணவர் சேர்க்கை துவக்கம்
நாமக்கல் அண்ணா அரசு கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்பு மாணவர் சேர்க்கை ஆக. 25ம் தேதி முதல் துவங்குகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் அண்ணா அரசு கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்பு மாணவர் சேர்க்கை ஆக. 25ம் தேதி முதல் துவங்குகிறது. இதுகுறித்து நாமக்கல் அண்ணா அரசு கல்லூரி முதல்வர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வித் துறையின்மூலம், நாமக்கல் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2021-22ம் கல்வியாண்டுக்கு இண்டர்நெட் மூலம் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான சேர்க்கை ஆக. 25ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெறவுள்ளது.25ம் தேதி சிறப்பு ஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
அரசு விதிகள், மதிப்பெண்கள், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முறையே அவர்களின் விண்ணப்பத்தில் வழங்கப்பட்டுள்ள செல்போன் மற்றும் இ-மெயில் வழியாக அழைப்பு தரப்பட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கைக்கு வரும்பொழுது டவுன்லோடு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், மாற்றுச்சான்றிதழ், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, சிறப்புப் பிரிவினருக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் வர வேண்டும். மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது தவறாமல் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். பெற்றோர்கள் உடன் வரத்தேவையில்லை என தெரிவித்துள்ளார்.