தனிப்பட்டா கேட்டு வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கிராமசபை கூட்டத்தில் மனு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
HIGHLIGHTS
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் அரடாப்பட்டில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் வீர்பிரதாப் சிங் தலைமை தாங்கினார். பயிற்சி ஆட்சியர் ரஷ்மிராணி, வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் முருகேஷ் பங்கேற்று பேசியதாவது: கலைஞரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினா் மூலம் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. வீடு இல்லாதவா்கள் இந்தத் திட்டத்தின்கீழ் தங்களது பெயரை பதிவுசெய்து பயன்பெறலாம்.
தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் என்ன என்று அறிந்து அதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கிராமங்களை மேம்படுத்தும் வகையில் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டத்தின் கீழ் நமது கிராமத்தை நாம் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதல்படி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளில் பொது நிதிகள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிக்கான குடிநீர் தேவை, கழிவுநீர் வசதி உள்ளிட்டவைகளை உடனுக்குடன் சீரமைக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்
தொடா்ந்து, வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு உள்பிரிவு பட்டா மாறுதலுக்கான ஆணைகள், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஒருவருக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.
இதில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, ஒன்றியக்குழு துணை தலைவர் ரமணன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆட்சியர் முருகேஷ் அப்பகுதியில் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டார். இதேபோல, மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
வாயில் கருப்புத் துணி கட்டி கோரிக்கை மனு
கூட்டுபட்டாவை பிரித்து தனிப்பட்டா கேட்டு 31 குடும்பத்தினர் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு மனு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாத்தூா் கிராமத்தில் அம்பேத்கா் நகரில் சுமாா் 31 குடும்பத்தினா் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா்.
அவர்கள் வசிக்கும் பகுதிக்கு கடந்த 2004-ம் ஆண்டு கூட்டுப்பட்டா தரப்பட்டது. அதன்பேரில் தற்போது வரை அவர்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். தனிப்பட்டாவாக பிரித்துக் கொடுத்தால் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வசதியாக இருக்கும் என பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், வெம்பாக்கம் தாலுகா அலுவலகத்திலும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாத்தூரில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் 31 குடும்பத்தினரும் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி தமிழரசியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில், மாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள குடியிருப்புகள் பொது பயன்பாட்டிற்கான நிலங்களை, அளந்திடவும் மேலும் 31 குடும்பங்களுக்கு தனித்தனியாக பட்டா பிரித்து வழங்கவும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.