அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்
நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில், மது ஒழிப்பு, போதை ஒழிப்பு குறித்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி நுண்கலை மன்றம் இணைந்து சிறப்பு பட்டிமன்றத்தை நடத்தின. இந்நிகழ்விற்கு, கல்லூரி முதல்வர் முனைவர். சி.வே. மைதிலி தலைமை தாங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேரா.தி.சு.அழகிய நாயகி வரவேற்றார். நடுவராக சங்கர் மேனிலைப் பள்ளி தமிழாசிரியர், முனைவர். கோ.கணபதி சுப்பிரமணியன் நடுவராக செயல்பட்டார்.
மது மற்றும் போதைபழக்கத்தில் இருந்து இளைஞர்களை காத்திட கனிவான அறிவுரையா? கடுமையான சட்டமா? என்ற தலைப்பில் நடைபெற்றது. கனிவான அறிவுரையே. என்ற தலைப்பில், மாணவிகள் செல்வ குட்டி, யமுனா. ரம்சானா ஆகியோரும், கடுமையான சட்டமே என்று சொர்ணலதா, ஞான பெல்சியா, சந்தான சீமா ஆகியோரும் வாதிட்டனர். நடுவர், முனைவர். கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் மது மற்றும் போதை பழக்கத்தில் இளைஞர்களின் ஈடுபடாமல் இருக்க தேவை கனிவான அறிவுரையே என்று தீர்ப்பு கூறினார்.
தொடர்ந்து விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, ஒவியப்போட்டிகள் நடைபெற்றன. நடுவர்களாக பேச்சுப் போட்டிக்கு இடையன்குளம் அமீர்ஜமால் பள்ளி ஆசிரியர் சீராஜீத்தின் முகமது; ஓவியப் போட்டிக்கு தீனா ஆர்ட்ஸ் ஓவியர் தினகரன்; கட்டுரைப் போட்டிக்கு, பேட்டை மாநகராட்சி மகளிர் பள்ளி ஆசிரியர்கள் முனைவர் ஆ.ஆசிர் பியூலா காந்திமதி, கே.வேலு மயில் ஆகியோர் செயல்பட்டனர்.
நடுவர்களுக்கு நினைவுப்பரிசை கோ.கணபதி சுப்பிரமணியன் வழங்கிப் பாராட்டினார். நிறைவாக மாணவ ஒருங்கிணைப்பாளர் வே.ராமலெட்சுமி நன்றி கூறினார்.