நாமக்கல்: நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபöற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மழைநீர் செல்லும் இடங்களில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பின் அவற்றை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் கால்வாயில் தங்குதடையின்றி தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக தூய்மையாகவும், ஆங்காங்கே குப்பைகள் சேராமல் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் கம்பங்களில் உள்ள மின் கம்பிகளை ஒட்டி செல்லும் மரக்கிளைகள் மற்றும் காய்ந்த மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மழையால் பாதிக்கப்படும் இடங்களில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி அவர்களை நிவாரண மையங்களில் தங்க வைக்கும் போது கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பொதுப்பணித்துறை அலுவலர்கள் நிவாரண மையங்களுக்காக உறுதியான கட்டிடங்களை தேர்வு செய்து வைக்க வேண்டும்.
இதேபோல் நெடுஞ்சாலைத்துறை அலுவலார்கள் ரோடுகள் மற்றும் கொல்லிமலை பகுதியில் மழையின்போது மரங்கள் விழுதல், மின்கம்பிகள் அறுந்து விழுதல் போன்றவற்றை சரி செய்ய, கூடுதலாக புல்டோசர், பொக்லைன், மரம் அறுக்கும் இயந்திர ரம்பங்கள் ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தங்களிடம் உள்ள மீட்பு கருவிகளான ரப்பர் படகு, மீட்பு குழுவினர், உயிர் காக்கும் உடைகள் போன்ற கருவிகளை பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் எனக் கண்டறியப்பட்டுள்ள கிராமங்களில் கூடுதலாகத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார். இதில், அனைத்து துறை அரசு அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.