நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.38 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்
நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.38 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டியில் (என்சிஎம்எஸ்) வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெறும். இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு, நாமக்கல், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், பரமத்தி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,350 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.
ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 400 முதல் ரூ.8 ஆயிரத்து 22 வரையிலும், சுரபி ரக பருத்தி ரூ.8 ஆயிரத்து 50 முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரத்து 899 முதல் ரூ.5 ஆயிரத்து 899 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் பருத்தி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.