கொல்லிமலையில் மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை: கலெக்டர் விளக்கம்
கொல்லிமலையில் உள்ள 3 டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபானங்கள் வாங்குவோர் பாட்டிலுக்கு ரூ.10 திரும்பப்பெறும் வழிமுறைகள் குறித்து கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
HIGHLIGHTS
கொல்லிமலையில் உள்ள 3 டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபானங்கள் வாங்குவோர் பாட்டிலுக்கு ரூ.10 திரும்பப்பெறும் வழிமுறைகள் குறித்து கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மலைப்பகுதிகளில் மதுபான பாட்டில்களை பயன்படுத்தி விட்டு காலி பாட்டில்களை சாலையோரங்களிலோ, விளை நிலங்களிலோ, வனப்பகுதியிலோ மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களிலோ போடுவதைத் தவிர்க்கும் வகையில் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கொல்லிமலை பகுதியில், இயங்கி வரும் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களுக்கு, வாடிக்கையாளர்கள் அரசு நிர்ணயம் செய்த விலையை விட ரூ.10 கூடுதலாக செலுத்தி மதுபானங்களை வாங்க வேண்டும். பின்னர் காலி மதுபான பாட்டில்களை தாங்கள் வாங்கிய மதுபானக் கடைகளில் திரும்ப ஒப்படைத்து ரூ.10 பெற்றுக்கொள்ளலாம் என்ற நடைமுறை இம்மாதம் 15ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை கொல்லிமலை வட்டத்தில் உள்ள செம்மேடு, செங்கரை, சோளக்காடு ஆகிய மூன்று மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு மட்டுமே பொருந்தும், என தெரிக்கப்பட்டுள்ளது.