பொதுமக்களுக்கு சீரான குடிநீர் சப்ளை: அதிகாரிகளுக்கு நாமக்கல் கலெக்டர் உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில், சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று, கலெக்டர் அறிவுறுத்தினார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், 2 டவுன் பஞ்சாயத்துக்கள் உட்பட 318 குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டத்தின் சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்சாயத்துக்கள் உட்பட 318 கிராம குடியிருப்புகளில் வசிக்கும் 1,94,905 பொதுமக்கள் பயன்பெறும் வகையில், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்பட்டு வருகின்றது. இத்திட்டம் காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு 1 நீர் சேகரிப்பு கிணறு, 6 நீர் உறுஞ்சு கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன்மூலம் தற்போது 10.41 எம்எல்டி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
கலெக்டர் ஸ்ரேயாசிங், மோகனூர் ஊராட்சி ஒன்றியம் ஒருவந்தூர் பகுதியில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை நீரேற்று நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திட்டத்திற்குட்பட்ட மோகனூர் ஊராட்சி ஒன்றியம், என்.புதுப்பட்டி பஞ்சாயத்தில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டிக்கு வரும் நீரின் அளவு குறித்தும், அதில் இருந்து பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் குறித்தும், அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து தலைவருடன் கலந்துரையாடினார். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டநீரை தனியாகவும், பிற உபயோகங்களுக்கான நீரை தனியாகவும், பொதுமக்களுக்கு வழங்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
பின்னர், நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், சிவியாம்பாளையம் பஞ்சாயத்து, கட்டபொம்மன் நகரில் செயல்பட்டு வரும் 4.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து, குடியிருப்பு பகுதிகளுக்கு நீரேற்றம் செய்யப்படும் குடிநீரின் அளவு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கடைக்கோடி பகுதியான காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்சாயத்தில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டிக்கு வரும் நீரின் அளவை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிடைக்கின்ற நீரை வைத்து அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வுகளின்போது டிஆர்டிஓ திட்ட இயக்குநர் மலர்விழி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராஜமாணிக்கம், உதவி செயற்பொறியாளர்கள் வரதராஜன், அகிலாபானு, பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.