வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடுங்கள்: கலெக்டர் வேண்டுகோள்
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமய விழாக்களின் போது கடைபிடிக்க வேண்டிய அரசின் விதிமுறைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. போலீஸ் எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை வகித்தார். கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:
தமிழ்நாடு அரசு வருகிற 15-ம் தேதி வரை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட உள்ள சமய விழாக்களின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அறிவித்துள்ளது. தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமய விழாக்களான மதசார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் உறியடி விழா உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி இல்லை. மேலும் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை.
எனவே விழாவை பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே கொண்டாட வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. தனி நபர்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை கோயில்களின் வெளிப்புறத்திலோ அல்லது சுற்றுப்புறத்திலோ வைத்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் அதனை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வெளியே செல்லும் பொதுமக்கள் தவறாது மாஸ்க் அணிவதோடு, சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என கூறினார். கூட்டத்தில் டிஆர்ஓ துர்கா மூர்த்தி, திருச்செங்கோடு சப்-கலெக்டர் இளவரசி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.