நாமக்கல்லில் நாட்டுச்சர்க்கரை ஆலை அமைக்க கோரிக்கை
நாட்டு சர்க்கரை உற்பத்தியில் முன்னனியில் இருக்கும் நாமக்கல்லில் நாட்டு சர்க்கரை உற்பத்தி ஆலையை தொடங்கினால் வேலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கோரிக்கைகள் எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தின் வழியாக காவிரி ஆறு பாய்கிறது. இதனை பயன்படுத்தி கரையோர விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டு வருகின்றனர். இதனால் ஜேடர்பாளையம், அண்ணாநகர், கபிலர்மலை மற்றும் பில்லிகல்பாளையம் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் சிலர் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகள் தங்கள் பகுதியில் கொட்டகை அமைத்து 250க்கும் மேற்பட்ட சிறு ஆலைகள் மூலம் நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். தேவையை பொறுத்து வியாபாரிகள் ஆலைகளுக்கே வந்து நேரடியாக கொள்முதலும் செய்கின்றனர்.
நாட்டு சர்க்கரையின் மகத்துவத்தை அறிந்து பலர் நாட்டு சர்க்கரையை விரும்பி பயன்படுத்த தொடங்கி உள்ளனர். தேவை அதிகரித்துள்ள போதும் பண்டிகை காலங்களை தவிர மற்ற நாட்களில் உற்பத்தியாளர்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. ஒரு சில சமயங்களில் வியாபாரிகளின் பதுக்கல் காரணமாக நாட்டு சர்க்கரையின் விலை உயர்ந்து விடுகிறது என கூறப்படுகிறது.இந்த நிலைமையை போக்க நாமக்கல்லில் நாட்டு சர்க்கரையை உற்பத்தி செய்யும் ஆலையை அரசின் சார்பில் அமைக்க வேண்டும். இதனால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைப்பதோடு நாட்டு சர்க்கரையை அரசே கொள்முதல் செய்து நுகர்வோருக்கு சரியான விலைக்கு கிடைக்க வழி ஏற்படும். இதனால் மேலும் ஏராளமானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் என்பதால் இப்பகுதியில் நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என கரும்பு விவசாயிகளும் நாட்டு சர்க்கரை உற்பத்தியாளர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.