2 நாள் பயணமாக குமரி வந்தார் தமிழக கவர்னர் - பலத்த போலீஸ் பாதுகாப்பு
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழக கவர்னர் ரவி, குமரிக்கு வந்துள்ளார்; இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, இரண்டு நாள் பயணமாக இன்று குமரி மாவட்டம் வந்தடைந்தார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வந்த அவரை, மாவட்ட ஆட்சியர் அரவிந்த், தென்மண்டல ஐ.ஜி.அன்பு, டி.ஐ.ஜி.பிரவின்குமார் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், மாலை 4 மணிக்கு சொகுசு படகு மூலம் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி, அங்கிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று தியானம் செய்கின்றார்.
தொடர்ந்து விவேகானந்த கேந்திர வளாகம் சென்று விவேகானந்த கேந்திர நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடும் அவர் அங்கிருந்து ராமாயண தரிசன கூடத்தை பார்வையிடுகின்றார். தொடர்ந்து நாளை அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டு ரசித்த பின்னர், கன்னியாகுமரியில் உள்ள பகவதியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்கின்றார். கவர்னர் வருகையை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.பத்ரிநாராயணன் தலைமையில் 500-கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கன்னியாகுமரி சுற்றுலா தலம் முழுவதுமாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.