தீபத்திருவிழா: திருவண்ணமலையில் தனியார் பேருந்துகள் ஓடாது
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தனியார் பேருந்துகள் ஓடாது என கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டத்தில் உரிமையாளர்கள் தெரிவித்தனர்
HIGHLIGHTS
திருவண்ணாமலை கலெக்டர் அலுலக கூட்டரங்கில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தனியார் பஸ் உரிமையாளர்களுடன் கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட எஸ்பி பவன்குமார்ரெட்டி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை முதல் பேருந்துகளை தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்த வேண்டும். மேலும் திருவண்ணாமலைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க வேண்டும் அதாவது 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 50 சதவீத பேருந்துகள் மட்டுமே திருவண்ணாமலைக்கு வந்து செல்லும் அனுமதிக்கப்பட்ட பேருந்துகளை தவிர்த்து வேறு வாகனங்கள் வருவதை தடுக்க மாவட்ட எல்லையில் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது என ஆட்சியர் கூறினார்.
இதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் தரப்பில் மாவட்ட நிர்வாகம் விதித்திருக்கிற கட்டுப்பாடு காரணமாக பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறையும் அதனால் 50 சதவீத பேருந்துகளை இயக்கினால் எங்களுக்கு இழப்புதான் ஏற்படும் எனவே மூன்று நாட்களுக்கு தனியார் பேருந்துகளை இயக்குவதை தவிர்க்கவே நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம் என்று கூறினர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து நகரத்திற்கு வரும் பக்தர்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக பணம் கேட்டால் உடனடியாக பக்கத்திலுள்ள காவலர்களிடம் புகார் அளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார். அதிக பணம் கேட்கும் ஆட்டோ ஓட்டுனர்களின் லைசென்ஸ் மற்றும் பர்மிட் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.