திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைச்சர் வேலு ஆய்வு
கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மேற்கொள்வது குறித்து அமைச்சர் வேலு ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து அமைச்சர் எ.வ.வேலு, இரவு திடீர் ஆய்வு செய்தார்.
ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு அண்ணாமலையார் கோவிலுக்கும் கிரிவலம் செல்லவும் தினந்தோறும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
மேலும் பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீப விழா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
தற்போது பவுர்ணமி மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் பகல், இரவு நேரங்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு தேவையான கூடுதல் சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கிரிவலப்பாதை செங்கம் சாலை சந்திப்பு பகுதி, அடி அண்ணாமலை சீனிவாசா பள்ளி அருகில், வாயு லிங்கம் கோவில் அருகில், கோசாலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் அருகில், சின்னக்கடை வீதியிலும் புதிதாக சுகாதாரம் வளாகம் கட்டுவதற்கான இடத்தினை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.
பவுர்ணமி, திருவிழா நாட்களைத் தவிர மற்ற நாட்களில் கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாததால் பக்தர்களும் பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதே போல குடித்த தண்ணீரும் கிடைப்பதில்லை. மற்ற நாட்களிலும் கழிவறைகள் திறக்கப்பட வேண்டும், அதேபோல் மற்ற நாட்களில் மூடி இருக்கும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட நிலையங்களை திறந்து வைக்க வேண்டும் என பக்தர்கள் பல முறை கோரிக்கை வைத்தனர் .
இந்நிலையில் கிரிவளப்பாதையில் மேற்கு காவல் நிலையம் அருகிலும் ,அடி அண்ணாமலை சீனிவாசா பள்ளி அருகிலும், வாயுலிங்கம் அருகிலும், இலங்கை அகதிகள் முகாம் அருகிலும், சின்னக்கடை வீதியிலும் புதியதாக ஐந்து இடங்களில் குளியலறை ஓய்வறையுடன் கூடிய நவீன வசதிகளுடன் கூடிய சுகாதாரம் வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடங்களையும் பொதுப்பணித்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பிறகு சின்ன கடை தெருவில் உள்ள பெரிய கால்வாயை பார்வையிட்டார், அப்போது அவரிடம் அப்பகுதி மக்கள் இந்த கால்வாயை தூர்வாரி யாரும் விழுந்து விடாதவாறு மேலே கற்கள் அமைத்து தர வேண்டும் எனவும், அதன் அருகிலேயே வழிப்பாதையை ஏற்படுத்தினால் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியும் என்றும், அந்த வழி குயமட தெரு வழியாக அண்ணா சிலை பின்புறம் வரை செல்லும் என்பதால் சின்ன கடை தெருவில் இருந்து திண்டிவனம் சாலை இணைப்பது, காந்தி சிலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பது என அனைத்திற்கும் வசதியாக இருக்கும் என்று தெரிவித்தனர் . இதன் சாதிய கூறுகளை அதிகாரிகளுடன் கலந்து பேசி பரிசீலிப்பதாக அமைச்சர் மற்றும் கலெக்டர் தெரிவித்தனர்.
ஆய்வின்போது கலெக்டர் முருகேஷ், அண்ணாதுரை எம்.பி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, சரவணன் எம்.எல்.ஏ., மாநில தடகள சங்க துணைத்தலைவர் கம்பன், தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர் ஸ்ரீதரன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, தி.மு.க. நிர்வாகிகள் கார்த்திவேல்மாறன் ,பன்னீர்செல்வம், பிரியா விஜயரங்கன், உள்பட பலர் உடன் இருந்தனர்.