மழைகாலத்தில் மின்சாதனங்களை பாதுகாப்புடன் இயக்க மின்வாரியம் அறிவுரை
மழைகாலத்தில் பாதுகாப்புடன் மின்சாதனங்களை உபயோகிக்க வேண்டும் என்று, மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
HIGHLIGHTS
இது குறித்து நாமக்கல் தமிழ்நாடு மின்வாரிய மேற்பாவை பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் பல்வேறு தேவைகளுக்கும் மின்சாரத்தை உபயோகித்து வருகின்றனர். மின்சாரத்தை சரியாக உபயோகிக்காவிட்டால், மின் விபத்து ஏற்பட்டு உடல்பாதிப்பு முதல் உயிரிப்பு வரை நடைபெறும் அபாயம் உள்ளது. மழைக் காலத்தில் மிகவும் பாதுகாப்புடன் மின் சாதனங்களை உபயோகிக்க வேண்டும்.
பொதுமக்கள் மின்கம்பம் மற்றும் அதன் ஸ்டே ஒயரின் மீது கொடிக்கயிறு கட்டி துணி காயவைக்கக் கூடாது. அவற்றை பயன்படுத்தி, பந்தல், விளம்பர பலகை அமைத்தல் மற்றும் கால் நடைகளை கட்டி வைத்தல் கூடாது. அறுந்து விழுந்த மின்சார கம்பிகளின் அருகில் செல்லாமல், அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை கட்டும் போது போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும்.
மேலும் டிரான்ஸ்பார்மருக்கு அருகிலோ, மின்கம்பிகளுக்கு அருகிலோ செல்லக்கூடாது. இடி, மின்னலின் போது டி.வி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர் மற்றும் போன்களை பயன்படுத்தக்கூடாது. மின் இணைப்புகளுக்குண்டான மின்கட்டமைப்புகளை உடனுக்குடன் சீர்செய்து பாதுகாப்புடன் பராமாரிக்க வேண்டும். ஒவ்வொரு மின் இணைப்புகளிலும் இஎல்சிபி கருவியை பொருத்த வேண்டும். நிரந்தர எர்த் இணைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும். தாங்கள் சார்ந்த பகுதிகளில் உள்ள மின்பாதைகளில் செடி, கொடி, மரங்கள் குறுக்கிட்டால், உடனடியாக மின்வாரிய பணியாளர்களுக்கு தெரிவித்து முற்றிலுமாக அகற்றுவதற்கு உதவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.