சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள் வரியை காலாண்டு வரியாக மாற்ற கோரிக்கை..!
சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள் வரியை காலாண்டு வரியாக மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வாகன உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் :
தமிழகத்தில், சுற்றுலா வாடகை வாகனங்களுக்கான ஆயுள் வரியை, காலாண்டு வரியாக மாற்றம் செய்ய வேண்டும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, சுற்றுலா வாகன ஆலோசகர் பாளையங்கோட்டை ஐயா தலைமையில், நாமக்கல் மாவட்ட சுற்றுலா வாகனங்கள் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்கள்ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
மோட்டார் வாகன தொழில் இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டணம் உயர்வு, டோல்கேட் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. புதிதாக பதிவு செய்த வாடகை வாகனங்களுக்கு சாலை வரி இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய மேக்ஸி கேப் வாகனங்களுக்கு காலாண்டு வரியை செலுத்தும் முறையை மாற்றி, அனைத்து பழைய வாகனங்களுக்கும் ஆயுள் வரியாக (லைஃப் டேக்ஸ்) செலுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கடந்த 1ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வால் பல மேக்சி-கேப் வாகனங்கள் எப்.சி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. தற்போது ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ளதால் வாகனங்களை ஓட்டும் வாடகை வண்டிகள் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் ஆயுள் வரி பிரச்சினையால் பல வாகனங்களை இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் டிரைவர்களும், உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோர் மேக்சி கேப் வாகனங்களுக்கு, ஆயுள் கால வரியை நீக்கி, மீண்டும் காலாண்டு வரியாக மாற்ற வேண்டும். மேலும் உயர்த்தப்பட்ட வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.