நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை: கலெக்டர் உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு கலெக்டர் உதத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சுகாதாரத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து, சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்கள் சுகாதார பணிகளை பொது சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். ஒரு சில நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கண்டறியப்படும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முழு மூச்சுடன் செயல்பட வேண்டும்.
கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கழுவி சுத்தம் செய்து தினசரி குளோரினேசன் செய்தல், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், டயர்களை அகற்றுதல், சாக்கடை அடைப்புகளை கண்டறிந்து உடனடியாக சீர் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதை நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
கூட்டத்தில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரபாகரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.