கொல்லிமலையில் செல்போன் டவர் அமைக்க எம்.பி., கோரிக்கை
கொல்லிமலையில் உள்ள 13 மலைவாழ் கிராமங்களில், செல்போன் டவர்கள் அமைத்து, பொதுமக்களுக்கு 4ஜி செல்போன் மற்றும் இண்டர்நெட் சேவை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எம்.பி சின்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
கொல்லிமலையில் உள்ள 13 மலைவாழ் கிராமங்களில், செல்போன் டவர்கள் அமைத்து, பொதுமக்களுக்கு 4ஜி செல்போன் மற்றும் இண்டர்நெட் சேவை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எம்.பி சின்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, நாமக்கல் லோக்சபா எம்.பியும், சேலம் தொலைபேசி ஆலோசனைக்குழு தலைவருமான சின்ராஜ், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, கடல் மட்டத்தில் இருந்து 1,330 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. தனி தாலுக்காவாகவும், ஊராட்சி ஒன்றியமாகவும் அமைந்துள்ள இங்கு, மலைப் பகுதியில் 14 கிராம பஞ்சாயத்துக்கள் அமைந்துள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மலை கிராமங்களில் தற்போது செல்போன் சேவை மற்றும் இண்டர்நெட் சேவைகள் முழுமையாக கிடைக்கவில்லை. அறிவியல் ரீதியாக நாடு வளர்ச்சியடைந்தும், கொல்லிமலையில் உள்ள மக்களுக்கு இன்னும் தொலைத்தொடர்பு சேவை முழுமையாக கிடைக்காத காரணத்தினால் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் இண்டர்நெட் வசதி கிடைக்காமல் ஆன்லைன் மூலம் படிப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
கொல்லிமலையில் உள்ள மலைவாழ் மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் நலனைக் கருத்தில் கொண்டு, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுக்காவிற்கு உட்பட்ட தேவனுர் நாடு, சேலுர் நாடு, ஆலத்தூர் நாடு, குண்டனி நாடு, குண்டூர் நாடு, அரியூர் சோலை, தின்னனூர் நாடு, எடப்புளி நாடு, பெரைக்கரை நாடு, சித்தூர் நாடு, திருப்புளி நாடு, அரியூர் நாடு மற்றும் அடக்கம் புதுகோம்பை ஆகிய 13 மலை கிராமங்களில் அதிவேக 4ஜி செல்போன் டவர்கள் அமைக்க வேண்டும். இதன்மூலம் அனைவருக்கும் செல்போன் சேவை மற்றும் இண்டர்நெட் சேவை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.