நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறப்பு..!
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
நாமக்கல்:
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில், 700 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புதிய மருத்துவமனையை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி மருத்துவ சேவையை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
அனைவரும் தினசரி நன்றாக விளையாடி, உடற்பயிற்சி செய்தால் தான் எதிர்காலத்தில் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வாழ முடியும். அதன் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான பணிச்சுமையை குறைக்க முடியும். நாமக்கல் மாவட்டம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரும் மாவட்டம். தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் பல மருத்துவர்களை உருவாக்கியது இந்த நாமக்கல் மாவட்டத்தில் இயங்குகிற பள்ளிகள் தான். நீட் தேர்வு இல்லாமல் இருந்தால், இன்னும் அதிகமான ஏழை, எளிய, அரசுப்பள்ளி மாணவர்களால், மருத்துவக் கல்வி பெற முடியும். அதை நோக்கி தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் படித்த மாணவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்கின்றனர். ஆனால், இந்த மாவட்டத்துக்கென்று ஒரு அரசு மருத்துவக் கல்லூரி இல்லாமல் இருந்தது. தற்போது, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சேவைகள் தொடங்கப்படுவதன் மூலம் அந்தக் குறை நீக்கப்படுகிறது.
திமுக எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மக்கள் நல்வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது. இது திமுக அரசு முதன்முதலில் ஆட்சிக்கு வந்த 1967ஆம் ஆண்டு தொடங்கி இப்போது வரை தொடர்கிறது. ஒரு சமூகத்தில் வாழுகிற மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் தான் அந்தச் சமூகம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் அறிவாற்றலிலும் சிறந்து விளங்க முடியும் என்பதை குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி நன்கு உணர்ந்திருந்தார். அதனால் தான் 2006 ஆம் ஆண்டிலேயே மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி வேண்டும் அவர் கனவு கண்டார். அதன் விளைவாக, இன்று தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நவீன வசதிகள், கூடுதல் படுக்கை வசதி கொண்ட கட்டிடங்கள் திமுக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இப்போது நமது முதலமைச்சர் தலைமையிலான திமுக அரசு, பொறுப்பேற்ற பிறகு, இந்த நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் 8 துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், தமிழ்நாட்டில் இருக்கிற சுகாதார வசதிகளைப் பார்த்து குஜராத்தில் இருந்து வந்த மருத்துவக் குழுவினர் ஆச்சரியத்தோடு பாராட்டினார்கள். இது தான் திராவிட மாடல். மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு வழிகாட்டக் கூட்டிய ரோல் மாடல் துறையாக விளங்கி வருகிறது, அது மேலும் மேலும் தொடர டாக்டர்களும், நர்சுகளும் மற்ற துறை பணியாளர்களும் பணியாற்றிட வேண்டும் என்று கூறினார்.
ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்;