கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு: 240 தேர்வர்கள் பங்கேற்பு
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில், 120 உதவியாளர் காலிப் பணியிடத்துக்கு நடந்த நேர்முகத்தேர்வில், 240 பேர் பங்கேற்றனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில், 120 உதவியாளர் காலிப் பணியிடத்துக்கு நடந்த நேர்முகத்தேர்வில், 240 பேர் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், கூட்டுறவு பண்டக சாலைகள் உள்ளிட்ட தொடக்க கூட்டுறவு சங்கங்களில், காலியாக உள்ள 120 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான அழைப்பு ஆன்-லைன் மூலம் விடுக்கப்பட்டது. அதில் விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்து தேர்வு, 2023ம் ஆண்டு டிச. 24ல், நாமக்கல் மாவட்டத்தில் நடத்தப்பட்டது. அதில், 1,254 தேர்வர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், எழுத்து தேர்வில் தகுதியான, 240 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு துவக்கி நேர்காணலை வைத்தார். காலை முதல், மாலை வரை நடந்த நேர்முகத்தேர்வில் பங்கேற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்.