ஆகஸ்ட் 31ல் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்
வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற ஆக. 31ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் மாதம்தோறும், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில், ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 31ம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிகிறார்.
இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்