நாமக்கல்லில் பிரபல லாரி அதிபர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
நாமக்கல்லில் பிரபல லாரி அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என போலீசார் விசாரணை.
HIGHLIGHTS
நாமக்கல், எஸ்.பி புதூரைச் சேர்ந்தவர் கணபதி (58). கேஸ்டேங்கர் லாரி அதிபர். இவர் தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் பொருளாளராகவும், இணை செயலாளராகவும் ஏற்கனவே பதவி வகித்தார். ரோட்டரி சங்கத்திலும் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். இவரது மனைவி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன், இருவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த கணபதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் தீராத வயிற்று வலியால் தற்கொலை செய்து இருப்பதாக தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக லாரித்தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர், வாங்கிய கடனை திருப்பிச்செலுத்த முடியவில்லை. அவருக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தால் அவர் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அவருடைய தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.