அனுமதியின்றி கொரோனா டெஸ்ட்- நாமக்கல்லில் 15 ஆய்வகங்களுக்கு நோட்டீஸ்!
நாமக்கல் மாவட்டத்தில் ஐசிஎம்ஆர் அனுமதி இல்லாமல் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட 15 தனியார் ஆய்வகங்களுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாமக்கல்லில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனாவுக்கான சளி (ஆர்டிபிசிஆர்) பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், தனியார் ஆய்வகம் உள்ளிட்ட மொத்தம் 5 ஆய்வகங்களுக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கொரோனா பரிசோதனைக்கு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில், ஐசிஎம்ஆர் அனுமதி பெறாமல், கொரோனா பரிசோதனை செய்து, சாம்பிள்களை சேலம் கோவையில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி முடிவுகளை பெற்றுத் தருகின்றனர். ஆனால், அவற்றை முறையாக, சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிப்பதில்லை.
இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை இனம் கண்டு பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு, ஐசிஎம்ஆர் அனுமதி பெறாமல் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய கூடாது என்று, மாவட்ட சுகாதாரத்துறை மூலம் 15க்கும் மேற்பட்ட ஆய்வகங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.