நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு : விவசாயிகள் சங்க தலைவர்
நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
தமிழக அரசு கொண்டுவந்துள்ள, நில ஒருங்கிணைப்பு சட்டத்தால், எதிர்காலத்தில் விவசாயிகளின் விளை நிலம் முற்றிலும் அழிந்துவிடும். இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து, நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர், நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசு, கடந்த ஏப்ரல் 23ல், சட்டசபை கூட்டத் தொடரில், 2023ம் ஆண்டு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளது. நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவை அனுமதி பெறுவதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில், கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக கவர்னரும், அச்சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கடந்த, 17ம் தேதி அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு, சிறப்பு திட்டம் என்ற பெயரில், தமிழக விவசாயிகள் பயிர் செய்யும், பல்லாயிரக்கணக்கான விளைநிலங்கள், அதை சுற்றியுள்ள குளங்கள், ஏரிகள், பாசன கால்வாய்கள் மற்றும் நீர்வழி பாதைகள் அனைத்தும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலம் குறித்து கருத்து கேட்காமல், தமிழக அரசு கையகப்படுத்துவதற்கு இந்த சட்டம் பொருந்தும் வகையில் உள்ளது.
இதனால், எதிர்காலத்தில் விவசாயிகளின் விளை நிலமும், விவசாயமும் முற்றிலும் அழிந்துவிடும். இந்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என, உதமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், பலமுறை அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு கொண்டு வந்த நில ஒருங்கிணைப்பு சட்டம் தமிழக விவசாயிகளுக்கு மிக ஆபத்தான சட்டம். இந்த சட்டம், தமிழக விவசாயிகளை முழுமையாக பாதிக்கும் வகையில் உள்ளது. அதனால், தமிழக அரசு, நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறக்கோரி, விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.