நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் பாரதியார், ராஜாஜி பிறந்த நாள் விழா..!
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்ல நூலகத்தில், பாரதியார் மற்றும் ராஜாஜி பிறந்த நாள் விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் பாரதியார், ராஜாஜி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் :
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்ல நூலகத்தில், பாரதியார் மற்றும் ராஜாஜி பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில், நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை, நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலக வாசகர் வட்டம் சார்பில், மகாகவி பாரதியார் மற்றும் மூதறிஞர் ராஜாஜி பிறந்தநாள் விழா நடைபெற்றது, வாசகர் வட்டத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். நூலகர் செல்வம் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பாரதியார் படத்துக்கு ராமசாமியும், ராஜாஜி படத்துக்கு வடிவேலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். விழாவில், மோகனூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வீரராகவன், கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் ஆகியோருக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் யுவராஜா கோபாலசாமிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
டாக்டர் எழில் செல்வன் தலைமையில், பாரெங்கும் பாரதி என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. தமிழாசிரியர் ராமு, காலங்களைக் கடந்த பாரதி என்ற தலைப்பிலும், தமிழாசிரியர் செந்தில்குமார், பாரதி ஒரு மனிதநேய கவிஞர் என்ற தலைப்பிலும், கவிஞர் சேந்தை செழியன், பெண்ணியம் போற்றும் பாரதி என்ற தலைப்பிலும், பேராசிரியர் அனுராதா, பாரதி ஒரு தீர்க்கதரிசி என்ற தலைப்பிலும், பாரதியாரின் தனிச்சிறப்புகளை கவி பாடினார்கள்.
விழாவில் டாக்டர் ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், ரயில் பயணிகள் சங்க தலைவர் சுப்பிரமணி, செங்கோடன், அமல்ராஜ், ரவீந்திரன், ராமன், ஆசிரியர் ஜெகதீசன், கிருஷ்ணகுமார் ரவி, வடிவேல், ரஃபிக், துரைசாமி, நடராஜன், நூலகப் புரவலர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இறுதியில் வாசகர் வட்டப் பொருளாளர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.